Tuesday, April 26, 2011

கோத்தாபய ராஜபக்ஷ அமெரிக்காவில் கைது செய்யப்படும் நிலையை எதிர்கொண்டுள்ளார்?

பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அமெரிக்காவில் வைத்துக் கைது செய்யப்படும் நிலையை எதிர்கொண்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சனிக்கிழமை மிகவும் இரகசியமான முறையில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். தற்போது அவர் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தங்கியிருப்பதாக தனிப்பட்ட தகவல் வட்டாரங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அமெரிக்காவில் தங்கியிருக்கும் காலத்தில் ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை குறித்து அவர் முக்கியமான அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபட்டிருப்பதை இலங்கைத் தூதரக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அத்துடன் அவரது புதல்வனின் திருமண விடயங்களைக் கவனிக்கும் நோக்கிலேயே அவர் அமெரிக்காவுக்கு வருகை தந்துள்ளதாகவும், அதற்கு மேலதிகமாகவே உத்தியோகபூர்வ சந்திப்புகளை மேற்கொள்ள முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாகவும் தூதரக அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கையின் மூலம் போர்க்குற்றங்களை இழைத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை அமெரிக்காவில் வைத்துக் கைது செய்யும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாகவும் நம்பகமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க குடியுரிமை பெற்றவர் என்ற ரீதியில் அவரை விசாரிப்பதற்கான உரிமை அமெரிக்க நீதித்துறைக்கு உண்டு என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.

1 comment: